டிவி சீரியல் பார்த்த ஒரு கணவன் தன் மனைவியைக் கொல்வதற்கு நூதன திட்டத்தை செயல்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிவி சீரியலைப் பார்த்து விட்டு அதே போல் தன் மனைவியைக் கொன்று ஒரு நல்லபாம்பு வாங்கி வந்து அதைக் கொண்டு மனைவியின் உடலைக் கடிக்க வைத்து பாம்புக் கடியால் தன் மனைவி இறந்து விட்டதாக போலீசாரை நம்ப வைப்பதற்கு முயற்சி செய்துள்ளார். இந்த விநோதமான சம்பவம் மத்திய பிரதேஷ் இந்தூர் நகரில் நடந்துள்ளது.
இந்தூர் நகரைச் சேர்ந்த அமிதேஷ் படாரியா (36) முன்னாள் வங்கி மேலாளர். இவன் டிவி சீரியலைப் பார்த்து தன் மனைவியைக் கொல்ல நூதன திட்டம் தீட்டினான். அமிதேஷ் தன் தங்கையோடும் தந்தையோடும் சேர்ந்து மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சு விட முடியாமல் செய்து கொன்றான்.
ராஜஸ்தானில் இருந்து வாங்கி வந்த நல்ல பாம்பு ஒன்றை முன்னரே வீட்டில் மறைத்து வைத்திருந்தான். அதனை வெளியில் எடுத்து மனைவியின் இறந்த உடலைக் கடிக்க வைத்தான். பின்னர் அந்த நல்ல பாம்பையும் கொன்று மனைவியின் உடல் அருகில் வைத்தான். பாம்புக் கடியால் தன் மனைவி மரணம் அடைந்து விட்டதாக போலீசாரை நம்பச் செய்ய அமிதேஷ் நாடகம் ஆடினான்.
ஆனால் அந்தப் பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த அறிக்கையைக் கொண்டும் அமிதேஷ் போனில் இருந்த போட்டோக்களைக் கொண்டும் அவன் தன் மனைவியைக் கொன்று விட்டு பாம்புக்கடி என்று நாடகம் ஆடுகிறான் என்பதை போலீசார் விசாரணையில் அறிந்து கொண்டனர்.
இதை அடுத்து அமிதேஷ், அவன் தங்கை, தந்தை மூவரையும் கைது செய்தனர். மனைவியின் கொலை வழக்குடன், கூடவே நல்லபாம்பைக் கொன்றதற்காகவும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவன் மீது போலீசார் இன்னொரு வழக்கும் பதிவு செய்தனர்.