தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27 மற்றும் டிச.30-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்கு இந்தத் தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலின்போது 76.19 சதவீதம் வாக்குகளும் 2-ஆம் கட்ட தேர்தலின் போது 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குச் சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் 315 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இவற்றை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இன்று காலை தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்தத் தேர்தலில் 4 பதவிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குச் சீட்டுகளில் வாக்குகளை பதிவு செய்தனர்.
எனவே இவற்றை எண்ணும்முறை குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
முதலில் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்குச் சீட்டுகள் கொட்டப்படுகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 வாக்கு எண்ணுபவர்கள் பணியில் உள்ளனர்.
இவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான ஓட்டுகளை அடுக்கி, தனித்தனியாக பிரிக்கிறார்கள்.
4 பதவிகளுக்கும் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 4 அறைகளுக்கும் அந்தந்த அறைகளுக்கான ஓட்டுகள் கொண்டு செல்லப்படுகின்ன. பின்னர் யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி வாரியாக போடப்பட்ட வாக்குகள் பிரித்து எண்ணப்படுகின்றன.
8 ரவுண்டுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடக்கும். வாக்குகளைப் பிரிக்கும் பணியே இன்று பகல் 1 மணிக்கு மேல் வரை ஆகுமாம். இந்தப் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
இன்று காலை சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகள் குளறுபடியால் ஆரணி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஆனது.
செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்.
தூத்துக்குடி மாவட்டத்தில், மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
புதுக்கோட்டை, ராமநாதபுரத்தின் கமுதி, திருவள்ளூரில் வாக்கு எண்ணிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை.
புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் பணி ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டது. ராமநாதபுரம் கமுதி ஒன்றியத்தில் வாக்குச்சீட்டுகளை பிரித்தெடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இராஜபாளையத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது..
வாக்கு சீட்டை பிரிக்கும் இடங்களில் காட்சி பதிவு செய்ய செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் முட்டம் 1-வது பகுதியில் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் முகவர்கள் கையெழுத்து இல்லாததால் குளறுபடி ஏற்பட்டது.
வாக்குப் பெட்டியை திறக்கக் கூடாது என பல்வேறு கட்சி முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
சாவி இல்லாத நிலையில், பூட்டை சுத்தியலால் உடைத்து வாக்குப்பெட்டி திறக்கப் பட்டது!
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் தபால் ஓட்டுப்பெட்டி சாவி தொலைந்ததால் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் அனுமதியோடு தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பூட்டை உடைத்து வாக்குப்பெட்டி திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் எந்த அறைக்கு செல்வது ? வாக்கு சீட்டுகளை பிரிப்பது ? அவற்றை எப்படி எண்ணுவது என்று முறையாக பணியாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் பல எண்ணிக்கை மையங்களில் பணியாளர்கள் திணறினர்.
வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறுகிறது?!
வாக்கு பதிவு பெட்டியில் உள்ள வாக்குச் சீட்டுகள் முழுமையாக கொட்டப்படும்.
4 வண்ணங்களில் உள்ள வாக்குச் சீட்டுகள் தனிதனியாக பிரிக்கப்படும்.
வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஐம்பது ஐம்பதாக கட்டுகள் (Bundle) அமைக்கப்படும்
அதன்பிறகு வாக்காளர் பட்டியல், வாக்கு பதிவு செய்தோர் பட்டியல் சரிபார்க்கப்படும்
அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால், அதற்கான RO கடிதம் அளிப்பார்
அதன்பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.