அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக பிரிட்டன் இளவரசர் ஹாரி, விலகியதற்கான காரணத்தை முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் – மறைந்த டயானா தம்பதிக்கு வில்லியம்ஸ், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மகனான ஹாரி 35 அமெரிக்காவைச் சேர்ந்தவரும் முன்னாள் நடிகையுமான மேகன் 38 என்பவரை திருமணம் செய்தார்.
இந்நிலையில் அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ஹாரியும் அவரது மனைவி மேகனும் அறிவித்தனர்.சாதாரண வாழ்க்கை வாழப் போவதாகவும் சுயமாக உழைத்து சொந்தக்காலில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஹாரியை சமாதானப்படுத்த ராணி எலிசபெத் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஹாரியும் அவரது மனைவியும் அரச குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேற ராணி எலிசபெத் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இது சர்வதேச நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராணி எலிசபெத் சார்பில் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரது மனைவியும் இளவரசியுமான மேகன் இனி இளவரசர் – இளவரசி பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள்; மக்கள் வரிப் பணத்தையும் அவர்கள் பெற மாட்டார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரச குடும்ப வாழ்க்கையில் விலகியது குறித்து ஹாரி, மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது: நானும், மேகனும் திருமணமானவுடன் உற்சாகமாக இருந்தோம். சேவை செய்யவே இங்கு வந்தோம். ஆனால், அது முடியாமல் போனதால் இப்படி நடந்துவிட்டது என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இருவரும் பின்வாங்குவதற்கான முடிவை எளிதாக எடுக்கவில்லை. பல மாத யோசனைகள், பல வருட சவால்களுக்கு பிறகு எடுக்கப்பட்டது. இதைவிட்டால் வேறு வழியில்லை.
நான் யார்? எவ்வளவு உறுதியுடன் இருக்கிறேன்? என்பதை இந்த முடிவு மாற்றாது என்பதை அறிவேன். மேலும், அமைதியான வாழ்க்கையாக இருக்கும் என நம்புகிறேன். அரச குடும்பத்தினரை பாராட்டுகிறேன்.
ராணியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் என் பாட்டி மட்டுமல்ல, என் தளபதி. கடந்த சில மாதங்களாக எனக்கும் மேகனுக்கும் அவர் அளித்த ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு ஹாரி கூறியுள்ளார்.