2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித்ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை பெற்றிருக்கிறார் .
அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார். பிப்ரவரி மாதம் 8ம் தேதி சென்னையில் இருந்து துவங்குகிறார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு: ஸ்டூடியோக்களுக்குள் பாடி வந்த நான் மேடையில் பாடியது மிகவும் குறைவு தான். இப்போது என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பி இத்தனை பெரிய நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
உலகம் அமைதியாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஆல் லவ் நோ ஹேட் என்ற தலைப்பில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்.முதல் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் மைதானத்தில் நடக்கிறது.
3 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 30 பாடல்கள் வரை இடம் பெறும். நான் பாடிய பாடல்கள் மட்டுமல்லாது எனக்கு பிடித்த பாடல்களையும் பாட இருக்கிறேன். என்னோடு இணைந்து வேறு முன்னணி பாடகர்களும் பாட இருக்கிறார்கள்.எனது குரல் தனித் தன்மையுடையது என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள்.
எனது குரலுக்கு நான் மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. எனக்கு இசை மரபனுவை கொடுத்த முன்னோர்கள், கற்றுக் கொடுத்த அம்மா மற்றும் குரு. அதை ஏற்று ரசித்த ரசிகர்கள் இவர்கள் தான் சொந்தக்காரர்கள். சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றார்.