அமராவதி இல்லாவிட்டால் திருப்பதியை தலைநகராக்குங்கள் என்று தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தெதேக எம்எல்ஏ தொரபாபு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை மாற்ற நினைத்தால் திருப்பதி நகரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ தொரபாபு வேண்டுகோள் விடுத்தார்.
தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
பரிபாலன தலைநகரை விசாகப்பட்டினத்திற்கு மாற்றும் வாய்ப்பை எதிர்கொள்ள நேர்ந்தால் திருப்பதிக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். திருப்பதி- ஸ்ரீகாளகஸ்தி இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி உள்ளது என்றார்.
திருப்பதி நகரத்தில் கட்டடங்கள் கைவசம் உள்ளன என்றும் உலக நாடுகளை ஈர்க்கும் ஆன்மீக நகரம் திருப்பதியை தலைநகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மண்டலியில் எடுத்துக் கூறியுள்ளதாகவும் சொன்னார். திருப்பதி கல்வி நிலையங்களின் வளர்ச்சியோடு கூட சுற்றுலா கேந்திரமாகவும் வளர்ந்துள்ள நிலையில் பரிபாலன தலைநகருக்கான அருகதை அதற்கு ஏற்படுத்த வேண்டுமென்று விண்ணப்பித்தார்.
அமராவதியில் தலைநகர் ஏற்பாட்டிற்கு செலவு அதிகமாகும் என்று கூறும் அரசாங்கம், மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து கட்டடங்களுக்கு 1400 கோடி ரூபாய் செலவு செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
29 கிராமங்களில் பள்ளிக்கூடங்களை போலீசார் ஆக்கிரமித்தார்கள் என்றும் அதனை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற மீடியா நிருபர்களின்மீது நிர்பயா சட்டத்தை உபயோகித்து வழக்கு விதித்தார்கள் என்றும் போலீஸ் துறையை குற்றம்சாட்டினார்.
தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் நானி, மற்றும் நரேந்திர குமார், சண்முகம், ஒய் வி இராஜேஸ்வரி, பிரவீன் ஆகிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றார்கள்.