தஞ்சை பெரிய கோவிலில் ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்துவதா அல்லது தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்துவதா என்று சர்ச்சைகள் எழுந்த போது, அறநிலையத்துறை சமஸ்கிருதம், தமிழ் கலந்து கும்பமுழுக்கு நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில்கூறியது. அதனை ஏற்ற நீதிமன்றம், தமிழில் குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்றுகோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்றுகோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படியே கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அறநிலையத்துறை கூறிய படி தற்போது கும்பாபிஷேகம் நடத்தப் பட உள்ளது.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது.
தமிழக அறநிலையத்துறை, ‘பிப்.1ல் தொடங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.5ல் நடக்கும் கும்பாபிஷேக நாள் வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாகக் கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்’ என பதில் மனு செய்தது.
நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், ‘இதற்கு முன் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுபோல் தற்போது நடத்தப்படும். இதற்கு முன் முழுவதுமாக தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடந்தது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, தமிழிலேயே குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே அளித்த உறுதிமொழிப்படி, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடத்த வேண்டும். இதனை உறுதி செய்து அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
எனவே, அறநிலையத்துறை கூறிய படி, முதல் ஆறு நாட்களும் திருமுறை பாராயணம் மற்றும் மகுடாகம முறைப்படி கும்பமுழுக்கு நடத்தப்படும் என்று கூறப் படுகிறது.