சிறைகளில் நடக்கும் தவறுகளை தோலுரித்துக் காட்டி ஏடிஜிபி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்! இதை அடுத்து, சிறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக சிறைகளில் விதிமீறல், முறைகேடு நடப்பதாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறைத்துறை சரக துணைத் தலைவர்கள், மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள், சிறைத் துறை அலுவலர்களுக்கு தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி கனகராஜ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
சிறையில் நடக்கும் முறைகேடுகள், தவறுகள், விதிமீறல்களுக்கு உயரதிகாரிகள் முதல் கடைநிலை காவலர் வரை உடந்தையாக இருப்பதாக சுற்றறிக்கையில் ஏடிஜிபி குறிப்பிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை சிறைத்துறை மட்டுமல்லாது காவல்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படுவது, விதிமுறைகளை மீறி பணம் பெற்றுக்கொண்டு உறவினர்களை அனுமதிப்பது, கைதியின் மனைவியிடம் காவலர் ஒருவர் தகாத உறவு வைத்திருப்பது என்று பல நிகழ்வுகளை ஏடிஜிபி தனது சுற்றறிக்கையில் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் சொந்த லாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள் தவிர சிறைவிதிகளுக்கு புறம்பான செயல்களில் சிறைப்பணியாளர்கள் ஈடுபடுவதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் புகார்களுக்கு இடமளிக்காமல் சிறை நிர்வாகம் செயல்பட சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் கலக்கமடைய வைத்துள்ளது.