கொரோனா பாதித்த பாதுகாப்பு படை வீரர்களுடன் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குணமடைந்ததும் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த முகாமில் துணை ராணுவத்தின் 152 வீரர்கள் முகாமில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
வீரர்களை பாதுகாப்பாக வைத்திருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வீரர்களின் மன உறுதியை அதிகபடுத்துவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இது தொடர்பான தொலைபேசி உரையாடலில் அமித்ஷா பேசியதாவது: நீங்கள் ஒரு நல்ல கடமையைச் செய்துள்ளீர்கள்.
நீங்கள் குணமடைய நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். நம்பிக்கையை இழக்காதீர்கள். மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். கடவுள் உங்களுக்கு உதவுவார். உறுதியுடன் இருங்கள் மற்றும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுங்கள்.
இவ்வாறு அமித்ஷா பேசினார். இதற்கு பதிலளித்த வீரர், ‘ஐயா நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், நாங்கள் கொரோனா வைரசை தோற்கடிப்போம்,’ என பதிலளித்தார்.பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததும் தங்கள் வீட்டிற்கு வருமாறு அமித்ஷா அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலளித்த ஒரு வீரர், ‘நான் நிச்சயமாக உங்களை பார்க்க வருவேன். ஜெய்ஹிந்த் சார்,’ என்றார்.