இன்று “பங்குனி உத்திரம்”… வழக்கமான சூழலாக இருந்தால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் களை கட்டியிருக்கும். ஆலயங்கள் வழிபாடுகள் விண்ணை முட்டியிருக்கும். ஆனால் கொரோனா அச்சத்தால் கோயில்களுக்கும் பூட்டு போட்டு எல்லோரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் இந்நாளில் பகவத் சிந்தைக்கும் வழிபாட்டுக்கும் நாம் பூட்டுப் போட வேண்டிய அவசியமில்லையே!
காரணம் இந்த நாளின் மகிமை அப்படி! வீட்டுக்குள் இருந்து கொண்டே, நம் அன்றாட வாழ்க்கைக்கு லாக் டவுன் இருந்தாலும், இம்மை கடந்து மறுமைக்கு வழி தேடும் ஆன்மிக வாழ்க்கைக்கான ‘லாக்’ – பூட்டைத் திறக்கும் இந்தப் புனித நாளில் இறைவழிபாட்டை இனிதே செய்வோம்.
12-வது மாதம் பங்குனியும்,12-வது நட்சத்திரம் உத்திரமும் சேரும் நாள் பங்குனி உத்திரம் இந்த நாளில் சந்திரன் முழு நிலவாக அற்புதமாக காட்சியளிப்பார்.
சிவன் – பார்வதி திருமணம் நடந்தது பங்குனி உத்திரத்தில்.
முருகன் – தெய்வானை கல்யாணம் நடந்தது இத்திருநாளில்தான்.
ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.
.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
மகாலஷ்மி அவதார நாள் பங்குனி உத்திரம் தான்.
மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.
இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.
மன்மதன் பிறந்தது இந்த நாளில்தான்.
மணிகண்டனாகிய,ஐயப்பன் பிறந்தது இதே நாள் தான்.
அர்ஜுனன் பிறந்தது இதே நாளே.
இந்த நாளில் முருகனை நினைத்து விரமிருந்தால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.திருமணத்தடை நீங்கும். அளப்பறிய செல்வங்கள் கிடைக்கும். எனவே இந்த நாளைத் தவறவிடாதீர்கள்.