மடாதிபதியின் மகத்தான சேவை: மன்னார்குடி ஸ்ரீஸ்ரீ செண்டலங்கார சென்பக மன்னார் ஜீயர் ஸ்வாமிகள்!
மக்களின் பசி துயர் தீர்க்க திருவரங்கன் திருவுள்ளத்தால் ஸ்வாமிகள் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ளார்! மடத்திற்கு ஒரு சொத்தும் இல்லை. பெரிய அளவில் பொருள் வசதியும் இல்லை. இந்த மடத்தின் பின்புலத்தில் எந்த பெரும் தொழிலதிபர்களும் இல்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை மூன்று வேளையும் மடத்திலிருந்து நேரடியாக பசியால் வாடுபவர்களின் துயர் துடைக்க உணவளித்து வருகிறார்கள். மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகளின் வாகனம் வரும் வரை சாலையோரத்தில் இருப்பவர்கள் காத்து இருக்கிறார்கள். ஏனெனில் தினம் தினம் மூன்று வேளையும் வெவ்வேறு உணவு வகைகளை ஸ்வாமிகள் அளித்து வருகிறார்கள்.
திருவரங்கம் வடக்கு உத்தர வீதி மடத்துக்கே நேராகச் சென்று, உணவு பெற்றுச் செல்பவர்கள் நூற்றுக்கணக்கானோர். அரசு தலைமை மருத்துவமனை வாசல் (கொரானா வார்டும் அங்கு தான் உள்ளது) வரை தானே சென்று சளைக்காமல் உணவு தந்து வருகிறார்கள் ஜீயர் ஸ்வாமிகள்.
உணவு தயாரிக்கும் போது வெறும் மேற்பார்வையாளராக அமர்ந்து கொண்டு கட்டளை இட்டுக் கொண்டிருக்காமல், தாமே அவர்களுக்கு உதவியாக உணவு சமைத்தும் பொட்டலங்கள் செய்தும் பேக்கிங் செய்வதிலும் உதவி உறுதுணையாக இருக்கிறார்.