பெங்களூர்:
குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு வந்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கர்நாடகத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா வந்துள்ளனர் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் தலைவர், சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். மேலும், பாஜக.,வுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். இதனால் அதிர்ந்த காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை தற்காத்துக் கொள்ள அவர்களை பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி., டி.கே. சுரேஷ் இது குறித்து கருத்து தெரிவித்தபோது, இன்று காலை, குஜராத்தில் இருந்து எம்.எல்.ஏக்கள் வந்துள்ளனர் என்றும், அவர்கள் புனிதச் சுற்றுலாவுக்காக பெங்களூரு வந்ததாகவும் கூறினார். மேலும், “அவர்கள் கோயில்களை தரிசிக்க விரும்புகின்றனர். இன்று மாலை, அவர்கள் எங்கே செல்ல விரும்புகிறார்களோ அங்கெல்லாம் அழைத்துச் செல்லப் படுவார்கள். அதற்கு தகுந்த வகையில் அவர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்று கூறினார். பெங்களூரில் உள்ள ஈகில்டன் கோல்ட் வில்லேஜ் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். ரிசார்ட்டுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த சுரேஷ் இவ்வாறு கூறினார்.
எத்தனை பேர் இவ்வாறு வந்துள்ளனர் என்று சுரேஷ் தெரிவிக்காவிட்டாலும் கூட, 40 எம்.எல்.ஏ,க்கள் மற்றும் 3 மூத்த தலைவர்கள் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், குஜராத் காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சைலேஷ் பார்மர், ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தாங்கள் 44 பேர் பெங்களூர் செல்ல உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, “பாஜக.,வினரால் எங்கள் உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். இங்கே இருந்தால் எங்களுக்குப் பாதுகாப்பில்லை. எனவே வேறு இடத்துக்கு செல்லவுள்ளோம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இவ்வாறு வந்துள்ள தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை குஷிப் படுத்தும் படியான எந்த ஒரு உத்தரவும் தனக்கு கட்சி மேலிடத்தில் இருந்து வரவில்லை, அவர்கள் இயல்பாக வந்து தங்கியுள்ளனர் என்று சுரேஷ் குறிப்பிட்டார். மேலும், எத்தனை நாட்கள் அவர்கள் இங்கே தங்குவார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், எப்போது அவர்கள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதுவரை அவர்கள் இங்கே தங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்யும் ஆக.8ம் தேதி வரை அவர்கள் இங்கே இருப்பார்கள் என்று பேசப் படுகிறது.
51 பேர் கொண்ட குஜராத் காங்கிரஸ் உறுப்பினர்களில் 6 பேர், கடந்த 2 நாட்களில் ராஜினாமா செய்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் குஜராத் மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார். அவருக்கு 45 பேரின் ஆதரவு தேவைப் படுகிறது. ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து, அவருக்கு நெருக்கடி முற்றியுள்ளது. இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் படேலுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, 11 எம்.எல்.ஏக்கள், கட்சி மாறி பாஜக., குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத்துக்கு வாக்களித்தனர் என்பதால், காங்கிரஸ் தற்போது அச்சத்தில் உள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் இதே போன்று, கூவத்தூரில் அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டபோது, அவர்களுக்கு குஷிப் படுத்தும் விதமான விருந்துகள் அளிக்கப்பட்டன என்பது நினைவுகூரத் தக்கது.