இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கடந்த மார்ச் மாதம்தான் தெரிய வந்தது. எனவே மார்ச் மாத மத்தியிலேயே, லாக் டவுன் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. மேலும், அந்த நேரத்தில், வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் ஒன்று கூடவும், கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு தடையும் விதித்திருந்தது.
இத்தகைய சூழலில், ஹைதரபாத்தில் சிலர் கொரோனா அறிகுறிகளுடன் தெருக்களில் நடமாடியதையும், 6பேர் உயிரிழந்த நிலையிலும் இது குறித்து தெலங்கானா மாநில அரசு திடீரென விழித்துக் கொண்டு, விசாரணையில் இறங்கியது.
ஹைதராபாத்தில் தப்ளிக் இ ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோருக்கு தொற்று குறித்த அறிகுறிகள் இருந்த நிலையில், திடீரென விழித்துக் கொண்ட தெலங்கானா அரசு அதுகுறித்து விசாரணை மேற்கொண்டது. அப்போதுதான் தில்லியில் நடைபெற்ற மாநாடு குறித்து முதன் முதலில் தெரியவந்தது. இதையடுத்து உளவுத்துறைக்கு தகவல் அளித்த தெலங்கானா காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தில்லியில் நடைபெற்ற மாநாடு குறித்தும் தில்லியில் அப்போதும் அவர்கள் தங்கியிருந்தது குறித்தும் தெரியவந்தது
இந்தச் சூழலில், தில்லியில் உள்ள மார்கஸ் மசூதியில் தப்லீக் ஜமாத் அமைப்பு சார்பாக மார்ச் மாதம் ஒரு மத மாநாடு நடைபெற்றதும், இதில் பங்கேற்றுவிட்டு நாட்டின் பல பகுதிகளுக்கு திரும்பியவர்களால்தான், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதாகவும் கூறப்பட்டது. இதனை மத்திய மாநில அமைச்சர்களும் வெளிப்படையாகக் கூறினர்…
இந்நிலையில், தப்லீக் மாநாட்டில் பங்கேற்பதற்காக விசா நடைமுறைகள், அரசு வகுத்த விதிகள் உட்பட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக இந்தோனேஷியா, வங்கதேசம், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 129 பேர் மீது தில்லி பெருநகர நீதிமன்றங்களில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட 129 பேரில் 121 பேர், தங்களின் விதிமீறல் குற்றங்களை ஒப்புக் கொள்வதாகவும், எனவே தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தில்லியில் உள்ள இருவேறு பெருநகர நீதிமன்றங்களில் நேற்று நடைபெற்றது.
மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் ரஜத் கோயல் 98 இந்தோனேசியர்களுக்கு தலா ரூ .10,000 அபராதம் விதித்து அவர்கள் வெளியேற அனுமதித்தார்! இதனை அவர்களுக்காக ஆஜரான வக்கீல் ஆஷிமா மண்ட்லா கூறினார். அபராதத்தை PM CARES நிதியில் டெபாசிட் செய்ய நீதிமன்றம் அவர்களுக்கு உத்தரவிட்டது.
மேலும், கிர்கிஸ்தானில் இருந்து வந்திருந்த 23 வெளிநாட்டினருக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித்து, அவர்கள் வெளியேற பெருநகர மாஜிஸ்திரேட் ரோஹித் குலியா அனுமதித்தார்.
இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த டிஃபன்ஸ் காலனியின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட், லஜ்பத் நகர் உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் நிஜாமுதீன் இன்ஸ்பெக்டர் ஆகியோர் இந்த மனுவில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்று கூறினார்.
மீதமுள்ள 8 வெளிநாட்டினர், தாங்கள் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், விசாரணையை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.
இதனிடையே, இவ்வாறு அந்த வெளிநாட்டினர் சாதாரண அபராதத்துடன் வெளியேறுவதற்கு காரணமாக இருப்பவர் நிஜாமுதீன் போலிஸ் இன்ஸ்பெக்டர்தான் என்றும் குற்றச்சாட்டுகள் சமூகத் தளங்களில் எதிரொலித்தன.