தென்காசி: கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இ பாஸ்வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைத் தலைவர் நெல்சன், தென்காசி மாவட்டத் தலைவர் முத்துராமன், மாவட்ட செயலாளர் தங்கத்துரை, மாவட்ட பொருளாளர் சுந்தரவேல், மாவட்டத் துணைத் தலைவர் ராஜசேகர், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் செல்வன், ஒன்றிய தலைவர் ராஜதுரை ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
எதிர்கால கனவை நெஞ்சில் ஏந்தி, ஏற்றமிகு வாழ்க்கைக்கு வழிவகுக்க கலைக் கல்லூரிகளில் முதுகலைப் பட்டம் பயிலத் துடிக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பத்தோடு 5-ம் பருவ மதிப்பெண் பட்டியல் இணைக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது.
அவர்கள் இளங்கலை பயின்ற கல்லூரிகளில் சென்று மதிப்பெண் பட்டியல் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அவர்கள் படித்த கல்லூரிகள் பல்வேறு மாவட்டங்களில் இருப்பதால் அங்கு சென்று மதிப்பெண் பட்டியல் பெற்றுவர அவர்களுக்கு இ பாஸ் வழங்கும் முறையை சற்று எளிமைப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது..