கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வரவணை ஊராட்சியில் சாலைகள் அனைத்தும் சோலைகளாக மாற்றும் முயற்சியாக ஒவ்வொரு ஊராக சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கும் முயற்சியில் இரண்டாவது ஊராக இன்று பாலப்பட்டியில் மரம் நடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து ஊர்களில் உள்ள சாலைகளிலும் முதற்கட்டமாக 100 மரங்கள் 15 ஊர்களிலும் நட இருக்கிறோம்.
இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் மக்கள் பெரும்பாலும் நடந்தே சென்றனர். வணிகர்கள், அரசு சேவகர்களே கூட போக்குவரத்து சாதனங்களாக மாட்டு வண்டி குதிரை வண்டி என்று பயன்படுத்தினர். சாலை ஓரங்களில் மரங்கள் இருக்கும்போது நிழலில் பயணிக்கும் நல்வாய்ப்பு இருந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நவீன சாலைகள் அமைக்கப்பட்ட போது கூட சாலை ஓரங்களில் மரங்கள் நடப்பட்டது.
ஆனால் இன்று அனல் பறக்கும் சாலைகள் தான் உள்ளது . நவீன போக்குவரத்து சாதனங்கள் வளர்ச்சிக்கு பின்னர் குளிர்சாதன வசதியுடன் சாலைகளில் செல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் இன்று நம் பயணம் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கூட சாலையோர மரங்கள் மூலம் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் வழி இருந்தது. இன்று பெரும்பாலும் பல ஊர்களில் சாலைகள் மரங்கள் இல்லாமல் தான் உள்ளது.
அதற்கு நம் ஊர் விதிவிலக்கல்ல. இன்று நடப்படும் மரங்கள் பல ஆண்டுகள் கழித்து தான் பலனளிக்கும் என்றாலும் இம்முயற்சியினை தொடர்ந்து எடுத்து சென்று வருங்கால தலைமுறை இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழவும், பசுமை கிராமமாக மாறவும் அனைவரும் உதவுங்கள்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒரு நாட்டுக்கு அடிப்படை கிராமம் தான். அதனால்தான், நமது மகாத்மா காந்தி கூட , “கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு” என்று கூறினார். நம்_கிராமம் ..நம் தேசம். வளம் பெறச் செய்வோம். நலம் பெற்று வாழ்வோம். எனவே ஒவ் வொருவரும் நமது கிராமத்தை பசுமையாக மாற்ற உறுதி ஏற்போம்… என்கிறார் பசுமைக்குடியின் நரேந்திரன் கந்தசாமி.