மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்றும், மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுவதாகவும் மத்திய அரசு கவலை வெளியிட்டுள்ளது!
மாநில அரசுகளின் இபாஸ் கெடுபிடிகளால், வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தினை தடை செய்யக்கூடாது என மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பிய சுற்றறிக்கை இது குறித்து குறிப்பிடப் பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலங்களுக்குள் தனி நபர் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கு மாநில அரசுகள் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கும் போது உணவு சங்கிலி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவிக்கப் பட்டுள்ளது.