பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லௌங்கீ பூயியா வுக்கு மகேந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மகேந்திரா பரிசாக டிராக்டர் அளித்துள்ளார்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பாங்கேபஜார் ப்ளாக் என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள்.
நீர் வசதி இல்லாமல் இருப்பதால் நெல், கோதுமை போன்ற பயிர்களை பயிரிடும் நிலையில் அவர்கள் இல்லை. அதனால் அந்த இடத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக கிராமத்தை விட்டு நகரங்களுக்கு வெளியேறினார்கள்.
அதேபோல் கோட்டில்வா கிராமத்தில் வசிக்கும் லௌங்கீ பூயியா வின் மகன்களும் வயிற்றுப் பிழைப்புக்காக வெளியேறினார்.
ஆடுகள் மேய்க்கும் லௌங்கீ பூயியாவுக்கு ஒரு எண்ணம் வந்தது. கிராமத்திற்கு நீர் வசதி ஏற்படுத்தினால் தன் மகன்கள் யாரும் வயிற்றுப்பிழைப்புக்காக கிராமத்தை விட்டு வெளியேறாமல் இருப்பார்கள் என்று எண்ணினார்.
எண்ணியபடியே முதலில் கிராமத்திற்கு நீர் வசதி எவ்வாறு கொண்டுவருவது? நீர் வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்தால் கிராமத்திற்கு நீர் வரும்? என்றெல்லாம் அவர் யோசிக்க ஆரம்பித்தார். கிராமத்தின் அருகில் ஒரு மலை உள்ளது. பெய்யும் மழைநீர் அந்த மலைமேல் நின்று விடுகிறது. கீழே இறங்கி வருவதில்லை. அதனால் அந்த மலை மேல் இருக்கும் நீர் கீழே வரும்படி செய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எண்ணினார்.
எண்ணியபடியே கால்வாய் வெட்டுவதற்கு ஒரு வரைபடம் வரைந்து கொண்டு மலை மேலிருந்து கிராமத்திற்கு மூன்று கிமீ தூரத்திற்கு ஒரு கால்வாயைத் தோண்டினார். அவ்வாறு ஓராண்டு காலம் அல்ல… இரண்டு ஆண்டு காலம் அல்ல… ஒரேயடியாக 30 ஆண்டுகாலம் தனி ஒருவராக உழைத்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் கால்வாய் முழுமையடைந்தது. சுற்றுப்புறத்தில் இருக்கும் மூன்று கிராமங்களுக்கு தற்போது முழுமையாக நீர் வசதி கிடைத்துள்ளது. இதனால் வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப சொந்த கிராமத்திற்கு வருவதாகவும் தெரிவித்தார்.
ஆடுகளை மேய்த்துக்கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால்வாய் தோண்டியதாக கூறினார். லௌங்கீ பூயியா தோண்டிய கால்வாய் பற்றிய செய்தி சோஷல் மீடியாவில் வைரல் ஆனது.
மஹேந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மகேந்திரா அது குறித்து தெரிந்து கொண்டார். ஊரின் நன்மைக்காக 30 ஆண்டுகளாக சிரமப்பட்டு தண்ணீர் கால்வாய் தோண்டிய லௌங்கீ பூயியா மீது ஆனந்த் மகேந்திரா பாராட்டு மழை பொழிந்தார்.
பூயியா தோண்டிய கால்வாய் பிரமிடுகள், தாஜ்மஹால் போன்றது என்று புகழ்ந்தார். அவருடைய முயற்சிக்கு சிறு காணிக்கையாக டிராக்டர் அளிக்கப் போவதாக அறிவித்தார்.
அண்மையில் மகேந்திரா குரூப் ஊழியர்கள் பீகார் மௌன்டன் மேன் லௌங்கீ பூயியா வுக்கு டிராக்டரை அளித்தார்கள். தற்போது அது தொடர்பான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.