பேராவூரணி அருகே பேராவூரணி – புதுக்கோட்டை மெயின் சாலையில் பிணத்தை வைத்து சாலை மறியல்:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிணத்தை ரோட்டில் இறங்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .
செங்கமங்கலம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் ஐந்து தலைமுறைகளாக யாதவர், ஐயர், தேவர், அம்பலகாரர்கள், ஆசாரியார் உள்ளிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை இறுதி சடங்கு செய்வது வழக்கம்.
அதேபோல் ,இன்று செங்கமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 65) என்பவர் இறந்துவிட்டார் . அவரின் இறுதிச் சடங்கு உண்டான வேலைகளை சுடுகாட்டில் அம்பலகாரர்கள் செய்துவந்த நிலையில், இதனை அறிந்த யாதவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இந்த சுடுகாடு எங்களுக்கு சொந்தமானது… இதில் நீங்கள் இறுதி சடங்குகள் நடத்த அனுமதி இல்லை என தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அம்பலகாரர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிணத்தை பேராவூரணியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் மெயின் சாலையில் செங்கமங்கலம் அருகே இறக்கி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதில் அதிகமான பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
தகவலறிந்த பட்டுக்கோட்டை உதவி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோரின் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அந்த சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யுங்கள், இது சம்பந்தமாக வட்டாட்சியர் மூலமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறி சாலை மறியலை கைவிடச் செய்தனர் . அரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.