நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ள இ எம் ஐ குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்…
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.
தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களும் ‘கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது’ என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத்தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் அறிவிக்கப் பட்ட முழு அடைப்பின் போது, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய இ.எம்.ஐ., விவகாரத்தில் சில சலுகைகளை அறிவித்தது மத்திய ரிசர்வ் வங்கி. ஆனால் இந்த முறை அதே போல் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு தொழில்கள் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ள சூழ்நிலையில், வங்கிகளுக்கான இ.எம்.ஐ கட்டுவது குறித்து ரிசர்வ் வங்கி எதுவும் அறிவிக்கவில்லை.