பிரதமர் நரேந்திர மோதி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கோவிட் இரண்டாவது அலை ஏற்பட்ட பிறகு இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோதி மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட முதல் அலையின் போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்னும், அதன் பின்னரும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சில முறை உரையாற்றியுள்ளார். மக்களை ஒன்றிணைந்து செயல்பட உற்சாகப் படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் அலை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையில், அவர் இன்று ஏதாவது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்ட கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த இரண்டாவது அலையின் போது, பிரதமர் மோதி தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். தடுப்பூசிகள் குறித்து அரசியல் ரீதியாக கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு, அது ஊடகங்களில் பேசு பொருளானது.
இந்நிலையில் பிரதமர் மோதி, 7ஆம் தேதி 6வது மாதம், மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். முதல் அலையின் போது, கடுமையாகப் போடப்பட்ட ஊரடங்குகளால், தொற்று பெரிதும் கட்டுக்குள் இருந்தது என்பதும், நாடு முழுதும் உள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார் பிரதமர், குறிப்பாக, ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை அறிவித்தார்.
இந்நிலையில், பிரதமரின் இன்றைய உரையின் போதும், முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.