கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லாவின் விருது அறிவிக்கப்பட்டு அதை அவரது கணவர் பெற்றுக் கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. இதனால் தினந்தோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் என கொரோனாவுக்கு பலர் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையில் தடுப்பூசிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஊசியை செலுத்த மக்களுக்கு தொடர்ந்து தயக்கம் ஏற்பட்டிருந்தது.
மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் என கொரோனாவுக்கு பலர் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர்.
கொரோனா முதல் அலையில் தடுப்பூசிகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் ஊசியை செலுத்த மக்களுக்கு தொடர்ந்து தயக்கம் ஏற்பட்டிருந்தது.
கொரோனா முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்தப்பட்டாலும் அந்த ஊசியை கர்ப்பிணிகளுக்கு செலுத்தக் கூடாது என அரசு அறிவித்திருந்தது.
இதனால் முன்கள பணியாளர்களில் பல கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை. தங்கள் உயிரை பணயம் வைத்து பலரது உயிரை காத்தவர்களில் முக்கியமானவர் மதுரை டாக்டர் சண்முகப்பிரியா.
மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் 2005 ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொடங்கிய நாள் முதல் இடைவிடாமல் பணியாற்றி வந்தார். 8 மாத கர்ப்பிணியான இவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி பலர் வலியுறுத்தியும் இவர் கொரோனா தடுப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனக்கு கொரோனா இருப்பது தெரியாமலேயே அவர் மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து 90 சதவீதம் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அவர் ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த மே 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
கர்ப்பிணியாக இருந்தாலும் தன்னை பற்றி கவலைப்படாமல் சண்முகப்பிரியா ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளதால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டது.
சுதந்திர தின விழாவில் விருது வழங்குவோர் பட்டியலில் சண்முகப்பிரியாவின் பெயரும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சண்முகப்பிரியாவின் வீர, தீர, துணிச்சலான, தன்னலமற்ற சேவைக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
இதை அவருடைய கணவர் சண்முக பெருமாள் பெற்று கொண்டார். கொரோனா தொடங்கிய நாள் முதல் இடைவிடாமல் பணியாற்றி உயிர் நீத்த சண்முகப்பிரியாவுக்கு விருது கிடைத்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பாராட்டுகளும் அவர் குறித்த நினைவுகளும் குவிகின்றன.