புது தில்லி:
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகுமாறு காங்கிரஸ் கட்சி எம்பி.,க்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், தில்லியில் இன்று காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நாம் புதிய தலைவரை பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என உங்கள் சார்பில் நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் பொது சமூகம் என அனைத்தும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. எதிர்க் கட்சிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
குஜராத், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நமக்கு உற்ஸாகத்தை அளித்துள்ளன. இது மாற்றத்திற்கான நேரம். இதேபோல், காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தல் முடிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.
நாடாளுமன்றத்துக்கு தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்… என்று பேசினார்.