ஹைதராபாத்: மத்திய பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்காததை கண்டித்து ஆந்திராவில் பந்த் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் உள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில், கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி அதிருப்தி அடைந்தது,. தங்கள் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கப் படாத கோபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்தார்.பின்னர் மாநில நலன் கருதி தனது முடிவை மாற்றிக் கொண்டார் .
இந்தச் சூழ்நிலையில் நேற்று தனது கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான பிரச்னையை தெருவில் வைத்து தீர்க்க முடியாது நாடாளுமன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும். எனவே நாடாளுமன்றத்தில் ஆந்திராவிற்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டது தொடர்பான சட்டம் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 2 மணி நேரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் கண்டித்து ஓய்.எஸ்.ஆர். காங்., சி.பி.ஐ. ,சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. ஆந்திராவில் எதிர்க்கட்சிகள் நடத்த உள்ள பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லைப் பகுதியான திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்தான், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபம் கருதி, தீர்க்கமான தெளிவான நோக்கம் இன்றி, அவசர கதியில் பிரிக்கப்பட்டதாகவும், அதனால் பல்வேறு சிக்கல்களை இந்த அரசு சந்தித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினார். மேலும் காங்கிரஸ் தீர்க்கமற்ற பார்வையையும் சாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.