தமிழக அரசால் நடத்தப் பெற்ற அயலகத் தமிழர்கள் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மலேசிய தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டததோ சகாதேவன் அவர்களையும், உடன் வந்துள்ள மலேசிய அன்பர்களையும் வரவேற்று உபசரிக்கும் ஒரு நிகழ்வை கலைமகள் இதழ் மற்றும் தேஜஸ் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தியது.
டத்தோ சகாதேவன் அவர்கள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் மற்றும் மலேசிய முத்தமிழ்ச் சங்க புரவலராக இருப்பவர். அவருடன் ஒரு குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களது சேவைகளும் பெருமைகளும் தமிழகத்தில் உள்ளோருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனும் வகையிலும், அவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சியை கலைமகள், தேஜஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது.
ஜன.13 அன்று காலை மயிலாப்பூர் கிளப்பில் வைத்து நடைபெற்ற இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில், மலேசிய விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இந்திரநீலன் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். சென்னையின் பிரபல தொழிலதிபர் இலக்கிய ஆர்வலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் கலந்து கொண்டு அன்பர்களைப் பாராட்டினார். அவர் தமது பாராட்டுரையில், தமது மலேசிய தொழில்துறை அனுபவங்கள், சென்னையில் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை சுவையாகக் கூறினார்.
டத்தோ சகாதேவன் அவர்களுக்கு மலேசிய முத்தமிழ்சங்கம், ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற விருதை அளித்துள்ளது. நக்கீரர் தமிழ்ச் சங்கம் மனித நேயச் செம்மல் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ஆஸ்தான ஓவியர் லேனா,. முத்தமிழ்ச் சங்க தேசிய தலைவர் மனோகரன், துணைத் தலைவர் எட்வர்ட் ஞானசேகரன், செயலாளர் கரு பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் மதி மரீனாதேவி. செயலவை உறுப்பினர்களான பொன் சாமி , கருணாநிதி, கலைஞர் காந்திதாசன், சங்கிலிமுத்து, திருமதி லூசியா சாந்தி, குமாரி நாகேஸ்வரி உள்ளிட்டவர்களை இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களது சேவைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் மாலை, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரின் பின்னணி, குணநலன்களைச் சொல்லி, அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவருக்கும் மதிய விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேஜஸ் பவண்டேஷன் அறங்காவலர் மற்றும் கலைமகள் இதழ் பதிப்பாளர் பி.டி.டி. ராஜன் செய்திருந்தார்.