ஏடன் வளைகுடா பகுதியில், ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்த எண்ணெய் கப்பலுக்கு உதவியதற்காக நம் இந்திய கடற்படைக்கு உலகம் முழுதுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே கடந்த அக்.7 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், ஏடன் வளைகுடா, அரபிக்கடல், செங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் இந்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் ஏடன் வளைகுடா பகுதியில் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘மார்லின் லுவாண்டா’ என்ற எண்ணெய்க் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இந்தக் கப்பலில் 22 இந்தியர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். இவர்கள் உதவி கோரியதை அடுத்து, இந்திய கடற்படையினர், ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் சம்பவ இடத்துக்குச் சென்று, அந்தக் கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டது.
இதை அடுத்து, நம் இந்திய கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கைக்காக, நம் நாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிரிட்டன் பத்திரிகையாளர் மார்க் அர்பன், ”ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில், சீனாவை விட, இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் சாயர்ப்ரே வெளியிட்ட சமூகத் தளப் பதிவில், ‘இந்தியா தலைமை தாங்குகிறது! அதன் சக்தி எழுச்சி பெறுகிறது. இனி சீனாவைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘மார்லின் லுவாண்டா’ எண்ணெய் கப்பலுக்கு அளிக்கப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ”அவசர அழைப்பின்படி சம்பவ இடத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல், ஆறு மணி நேரம் போராடி, கப்பலில் இருந்த தீயை அணைத்தது. ”இந்த கப்பலுக்கு உதவ, அமெரிக்கா மற்றும் பிரான்சும் முன்வந்தன. தொடர்ந்து பிராந்தியத்தில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்,” என்றார்.
இந்நிலையில், சோமாலியா கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர் கடத்தினர். அந்த கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் இந்திய கடற்படையின் போர்க்கப்பல், கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக காப்பாற்றியது.
சோமாலியா கிழக்குக் கடற்கரை பகுதியில் ஈரான் கொடியுள்ள மீன்பிடிக் கப்பல் ஒன்று, 17 பேர்களுடன் சென்றது. அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியதுடன் அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் விமானப்படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து துரித நடவடிக்கையில் இறங்கியது. கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றியது.
இதுகுறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியபோது… சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் ஈடுபட்டது. அப்போது, ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், கப்பலையும், அதிலிருந்த 17 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர்… என்றார்.
இந்நிலையில், சோமாலியாவுக்கு கிழக்கே, சர்வதேச கடல் பகுதியில், கடந்த 27ஆம் தேதி, இலங்கையின் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் இருந்ததாகவும், இந்தக் கப்பலை சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர் கடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுடன், இலங்கை அதிகாரிகள் பேசி வருகின்றனர்.
இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானைச் சேர்ந்த 19 மாலுமிகளை இந்திய கடற்படையினர் ஜன.30 இன்று மீட்டுள்ளனர். இது ஒரு சாதனையாகப் பார்க்கப் படுகிறது.
கடந்த 36 மணி நேரத்தில் ஈராக்கை சேர்ந்தவர்கள் 17 பேர் இந்திய கப்பற்படையினரால் மீட்கப்பட்ட சம்பவம் சாதனையாகப் போற்றப்படும் வேளையில் இன்றும் இந்திய படையினருக்கு இந்தப் பாராட்டு கிடைத்துள்ளது.
இன்று சோமாலிய கடற்பகுதி அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த மீன்பிடிக் கப்பலை வழிமறித்து கொள்ளையடிக்கவும் கப்பலில் இருந்தவர்களை கடத்தவும் கடற்கொள்ளையர் முயற்சி செய்துள்ளனர். இந்திய கடற்பைடையினருக்கு இது குறித்த தகவல் கிடைத்ததும், ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் விரைந்தது. கடற்கொள்ளையர்கள் 11 பேரை துப்பாக்கி முனையில் பிடித்த நம் கடற்படையினர், பாகிஸ்தானை சேர்ந்த மாலுமி, மீனவர்கள், மற்றும் ஊழியர்கள் 19 பேரை மீட்டனர்.