சமீபத்தில் நடைபெற்ற பீகார், உ.பி.யில் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. கோராக்பூர், பஹல்பூர், அரேரியா ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக கோராக்பூர் தொகுதி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்த எம்பி தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மூன்று தொகுதிகளின் தோல்வியை வைத்து பாஜகவுக்கு இறங்குமுகம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் உபியில் அடிக்கடி நடந்த என்கவுண்டரும் இந்த தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது
இந்த தேர்தலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அகிலேஷ்-மாயாவதி கட்சிகளின் கூட்டணி என்பதும் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தனித்து நின்று வாக்குகளை பிரித்த போதிலும் இந்த கூட்டணிக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைத்துள்ளது. இருப்பினும் பாஜகவுக்கு இந்த தோல்வி வீழ்ச்சியின் தொடக்கமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைந்தால் இந்த வெற்றி பொதுத்தேர்தலிலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அகில இந்திய அளவில் ஒருமித்த கருத்துடன் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்பதும் சந்தேகம்தான். மேலும் இந்த தேர்தல் முடிவில் இருந்து பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் சரியான கட்சி இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.