
புது தில்லி: இரட்டை இலை மீட்புக்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதுதொடர்பான வழக்கில் இன்று தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
ஆர்.கே.நகரில் முதல்முறையாக இடைத்தேர்தல் நடைபெற்ற போது, அதிமுக.,வின் அதிகார பூர்வ சின்னமான இரட்டை இலைக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர். இதனால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பின்னர் தேர்தலும் ரத்தானது.
இந்த இடைப்பட்ட காலத்தில், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு, பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கின் விசாரணை, தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர், தினகரனிடம் குரல் பரிசோதனை நடத்த தில்லி போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு தினகரன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, தினகரன் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டி வீடியோவை தில்லி போலீசார் பெற்று குரல் பரிசோதனை நடத்தினர். இதனிடையே இந்த வழக்கு தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இருந்து தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. தினகரனுக்கு ஏற்கனவே நீதிமன்றம் நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்ததால் இன்று தினகரன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 4ம் தேதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



