நான் ராஜினாமா செய்யவில்லை என்று பல்டி அடித்தார் எம்.பி முத்துக்கருப்பன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறிய அதிமுக எம்.பி முத்துக்கருப்பன், திடீரென ராஜினாமா கடிதத்தை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக மக்களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்யத் தயார் என அவையில் கூறிய நிலையில், அதிமுக.,வின் மாநிலங்களவை எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக கூறி வந்தார்.
இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க இருந்த அவர், பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழில் எழுதியிருந்த தனது ராஜினாமா கடிதத்தை காட்டினார். அந்த கடிதம் நிராகரிக்கப் பட வாய்ப்புள்ளதாக சிலர் கூறினர்.
இந்நிலையில், திடீரென தன் ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவரிடம் கொடுக்கவில்லை என முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ராஜினாமா செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் கடிதத்தை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக இது குறித்து காலை முதலே பலவிதமான செய்திகள் உலா வந்தன.