புது தில்லி: பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி பங்கீட்டிற்கான வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரினார்.
காவிரி தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. காவிரி வழக்கில் வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதி இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது மத்திய அரசு.
அப்போது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை குறித்த காலத்தில் உடனடியாகத் தாக்கல் செய்ய இயலவில்லை. இதற்கு, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் இந்த வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று கூறியுள்ளது மத்திய அரசு.
கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதால், நீர் பங்கீட்டு வரைவு திட்டத்துக்கு பிரதமர் ஒப்புதல் பெற முடியவில்லை. பிரதமர், துறை சார்ந்த அமைச்சர் ஒப்புதல் பெற 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து காவிரி வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மேலும், வரைவு திட்டம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.