மதுரை: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரமும் உள்ளதை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், “முந்தைய ஒதுக்கீட்டில் 14.75 டிஎம்சி நீர்க் குறைப்பு என்பதைத் தவிர, நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே இறுதியானது. அதன் பின்னும் அதில் சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், தீர்ப்பை படித்துப் பார்த்துவிட்டு பின்னர் கருத்து சொல்ல வேண்டும் என்றார்.
முன்னதாக, கொடைக்கானலில் 57ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட ரோஜா தோட்டம், கொய்மலர்கள் செயல் விளக்க மாதிரித் தோட்டம் ஆகியவற்றைத் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் 3,495 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த மலர்க்கண்காட்சித் திறப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக அரசு சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நதி நீர் உரிமையை பெற்றுத் தந்துள்ளது என்று கூறினார்.