மக்கள் நல கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும் என்று அதன் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். சென்னையில் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மதிமுக தலைமையகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மதிமுக கொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மக்கள் நல கூட்டு இயக்கத்தின் 24 அம்ச குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணியில் இணையலாம் என்றார். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அவர் தெரிவித்தார்.
கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இணையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகும் மக்கள் நல கூட்டு இயக்கம் தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெரிவித்தார். விலைவாசியை கட்டுபடுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கூட்டு இயக்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் வைகோ கூறியுள்ளார்.