தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 – வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர். கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாருக் கான், அபினவ் முகுந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
அபினவ் முகுந்த் 12 ரன்களில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. அடுத்து இறங்கிய ரவிகுமார் ரோஹித் ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 52 ஆன போது ஷாருக் கான் 29 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய அஷ்வின் வெங்கட்ராமன் ரோஹித்ஹுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், கோவை கிங்ஸ் அணி 17. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரவிகுமார் ரோஹித் 34 ரன்களுடனும், அஷ்வின் வெங்கட்ராமன் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.