மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புலித்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது27). இவரது மனைவி சவுந்தர்யா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.
கப்பலூரில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிறுவனத்தில் திருமணத்திற்கு முன்பு சவுந்தர்யா பயிற்சி பெற்று வந்தார். நேற்று அதற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் என கணவரிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து புதுமண தம்பதியர் கப்பலூர் வந்தனர்.
இந்த நிலையில் கணவரை கம்பெனி வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்ற அவரது மனைவி சவுந்தர்யா அதன் பிறகு வெளியே வரவில்லை.
நீண்ட நேரமாக காத்திருந்த ராஜபாண்டி, உள்ளே சென்று விசாரித்தபோது பின்பக்க வழியாக சவுந்தர்யா சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ராஜபாண்டி புகார் செய்தார். புகாரில் மதுரை பைக்காராவில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் ஒருவருடன் சவுந்தர்யாவுக்கு பழக்கம் இருந்ததாகவும், அவருடன் சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.