சென்னை: வரும் 7ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ஆம் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இதை அடுத்து, தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல் அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
அதி தீவிர கனமழையை எதிர்பார்க்கப் படுவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி அதி கன மழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது என்று கூறப் பட்டுள்ளது.
இதனிடையே, கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.