சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதாகவும், அதே பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்றும் கூறினார்.
வரும் தினங்களில் படிப்படியாக தமிழகத்தின் இதர பகுதிகள், கேரளம், தென்கன்னட பகுதிகளில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும்!
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரை இடைவெளி விட்டு சில முறை மிதமாக மழை பெய்யும் என்றார் பாலசந்திரன்.