திருப்பதியில் பக்தர்களுக்கான லட்டுகளை பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவதற்கு பதிலாக, அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருமலையில் கடந்த மாதம் முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்தது. ஆனால், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்லும் கவருக்கு மாற்றுத் தீர்வு காணும் வரை பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த முடிவு செய்தது.
தினமும் திருமலையில் ஐந்து லட்சம் லட்டுகள் விற்கப்படுகின்றன. அவற்றை எடுத்துச் செல்ல ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தேவஸ்தானம் விற்பனை செய்து வருகிறது.
திருமலையில் பிளாஸ்டிக் தடை செய்யப் படுவதால், லட்டுகளை வழங்க பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக அட்டைப் பெட்டிகளில் லட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது தேவஸ்தானம்.
இதற்கான அட்டைப் பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளில் ஏழுமலையான் உருவப்படங்கள், தேவஸ்தான முத்திரை பதிக்கப் பெற்றிருக்கும்.
இந்த அட்டைப் பெட்டிகளில், 10 நாட்களுக்கு மேலாக லட்டுகளை வைத்து தர பரிசோதனை செய்யப்பட்டது. இதை அடுத்து அவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வர திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.