கம்யூனிஸ்ட்களின் கல்வீச்சால் பந்தளத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்து அமைப்பினர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கங்கே தாக்குதல் தொடுத்ததால், இரு தரப்பும் மாறி மாறி கல்வீச்சிலும் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலையில் இரு பெண்கள் கேரள அரசால் வலுக்கட்டாயமாக அழைத்துவரப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கேரளாவில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் கம்யூனிஸ்ட்களின் கல்எறிதல் தாக்குதலால் கொலை செய்யப் பட்டுள்ளார்.
சபரிமலை விவகாரத்தில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சபரிமலைக்குள் பெண்கள் இருவர் நுழைந்தார்கள் என்று தகவல் வெளியானதும், அதனை முதல்வர் பிணராயி விஜயன் உறுதி படுத்தி தகவல் வெளியிட்டதும், நேற்று மாலையிலேயே போராட்டங்கள் தொடங்கி விட்டன.
திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்னர் போராட்டம் நடத்தப் பட்டது. டயர்கள் எரிக்கப் பட்டன. முதல்வர் பிணராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.
இந்நிலையில், பம்பை அருகே பந்தளம் பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பாஜக., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல் உருவானது! இந்த மோதலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள்! இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீசி தாக்கிக் கொண்டனர். இந்தக் கலவரத்தில் சபரிமலை கர்ம சமிதியைச் சேர்ந்த சந்திரன் உண்ணி என்பவர் கல்வீச்சில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயது நிரம்பிய சந்திரன் உண்ணி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கலவரத்திற்கு காரணம் என்று பாஜக.,வினர் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் சந்திரன் உண்ணியை கொன்றதாக பாஜக.,வினர் கூறினர். இதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்.