ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி
7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை அடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரையும் வென்றது இந்திய அணி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடைபெற்றது., இதில் இந்தியா டாஸ் வென்று பந்துவீசத் தீர்மானித்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன் எடுத்தது.
231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 49.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியிலும் தோனியே கை கொடுத்தார். துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டியது. அடுத்து வந்த விராட் கோலி 46 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும் கேதர் ஜாதவும் மேலும் விக்கெட் விழாமல் நிலைத்து நின்று ஆடி, அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
தோனி 114 பந்துகள் விளையாடி, 87 ரன் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும். கேதர் ஜாதவ் 57 பந்துகளில் 61 ரன் எடுத்தார். இவர் 7 பவுண்டரிகள் அடித்தார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2ல் வென்று தொடரையும் கைப்பற்றியது. முன்னதாக டெஸ்ட் தொடரையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது இந்திய அணி.