விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயன்அடைவார்கள் என்றும் இதற்காக மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தது மத்திய அரசு. இதன், முதல் தவணையாக தலா ரூ.2,000 இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது.
திட்டம் அறிவிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் உடனே நிதி விடுவிக்கப்பட்டு, மூன்று வார காலத்துக்குள் விவரம் பெறப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று நிதியும் போடப்பட்டது ஒரு சாதனை என்றே பார்க்கப் படுகிறது.
இது கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுகளில், 2000 ரூபாய் அறிவிக்கப் பட்டால், பயனாளிகளைத் தேர்வு செய்து, அதற்கு கமிஷன் பெற்று, பல கட்ட கமிஷன்களைக் கடந்து, விவசாயியிடம் வெறும் 200 ரூபாயோ அல்லது 500 ரூபாயோதான் கையில் கிடைத்திருக்கும்.
ஆனால், டிஜிட்டல் இந்தியா மூலம், ஆதார் அட்டைகள் வங்கி எண் இணைப்பு மூலம், திட்டத்தில் அறிவிக்கப் பட்ட முழுத் தொகையும் மிகக் குறுகிய காலத்தில் பயனாளிகளுக்கு முழுவதுமாகக் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.