இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயற்சித்தது என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீனாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்.இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்தியாவின் சார்பில் அறிக்கை வெளியிட்டார்.
அதில், இந்திய விமானி ஒருவர் மாயம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மிக் 21 போர்விமானம் தாக்கப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது .
பாகிஸ்தானின் ஒரு போர் விமானத்தை இந்தியா தாக்கி அழித்தது என்று கூறியுள்ள ரவீஷ் குமார், மாயமான இந்திய விமானி தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது என்றும், மாயமான விமானியின் நிலை குறித்த உண்மை நிலையை அறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்திய விமானி ஒருவர் தங்கள் வசம் உள்ளதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து இந்தியா விசாரித்து வருவதாகவும், அத்துமீறி உள்நுழைந்த பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்திய விமானப்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்றும் கூறினார்.
முக்கியமாக, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது, அந்நாட்டு ராணுவத்தையோ பொதுமக்களையோ அல்ல என்று கூறிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், ஆனால், பாகிஸ்தானோ இந்திய ராணுவ நிலைகளையும் மக்கள் இருக்கும் பகுதிகளிலும் குண்டுகளை வீசியுள்ளது என்று கூறினார்!
மேலும், ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம் என்றும், காணாமல்போன இந்திய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, இன்று காலை மிக் 21 பைசன் ஜெட் போர் விமானத்தில் பயணித்த விமானி இன்னும் விமானப்படை தளத்திற்கு திரும்பவில்லை, கமாண்டர் அபிநந்தன் இன்னும் விமானப்படை தளத்திற்கு திரும்பவில்லை என ஏஎன்ஐ நிறுவனம் தகவல் வெளியிட்டது.
Statement by Official Spokesperson today
➡️ https://t.co/OEUNq7z5iY pic.twitter.com/nVkxqqjl2b— Raveesh Kumar (@MEAIndia) February 27, 2019