திமுக., கூட்டணியில் தொகுதி உடன்பாடு இழுபறியில் உள்ள நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் நடைபெறுகிறது. இதனை மதிமுக., பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் (05.03.2019 செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு, சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, நேற்று மக்களவைத் தேர்தலில் திமுக – மதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டதாகவும் தகவல் என்று செய்தியாளர்கள் மத்தியில் குறுஞ்செய்திகளும் வாட்ஸ் அப் மெசேஜ்களும் பரவின.
திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதியும், இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதியும், பாரிவேந்தருக்குக் கூட ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதிமுக., 3 தொகுதி கேட்டு முரண்டு பிடிப்பதாகக் கூறப் படுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் 3 தொகுதிகள் கேட்பதாகத் தகவல் வெளியானது.
காரணம், இ.கம்யூ.,கட்சியை விட இதுநாள் வரை கூடுதல் தொகுதிகளையே பெற்று வந்தது மார்க்சிஸ்ட். அது அதிமுக., கூட்டணியாக இருந்தாலும் சரி, திமுக., கூட்டணியாக இருந்தாலும் சரி…! இந்நிலையில், இ.கம்யூ.,க்கு சமமாக மார்க்சிஸ்டை பார்ப்பதை அக்கட்சி விரும்பவில்லை! அதுபோல், விடுதலைச் சிறுத்தைகள் அளவுக்கு மதிமுக., வை நினைப்பதை அக்கட்சியினர் விரும்பவில்லை.
இத்தகைய சூழலில், இரு கட்சிகளுக்கும் தலா 3 தொகுதி ஒதுக்கினால், திமுக., 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை வரும். திமுக., குறைந்த பட்சம் 20 தொகுதிகளிலாவது நிற்க வேண்டும் என்று விரும்புகிறது.
ஏற்கெனவே காங். 10, இ.கம்யூ. 2, வி.சி.க., 2 ,முஸ்லிம் லீக் 1, கொமதேக 1, ஐஜேகே 1 என 17 தொகுதிகளை கூட்டணிக்குக் கொடுத்து விட்டது. மதிமுக., மார்க்சிஸ்ட்க்கு தலா 2 தொகுதி கொடுத்தாலும் திமுக 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும்!
இந்த நிலையில், கிடைக்கும் 2 தொகுதிகளைப் பெற்று, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக.,வினர் பெரிதும் தயங்குகின்றனர். இப்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக, அக்கட்சியிலேயே மதிமுக.,வை இணைத்து விடலாம் என்றும், எதற்காக மதிமுக., தொடங்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதைந்து போனதால் மதிமுக.,வின் தனித்தன்மை இல்லாமல் போய்விட்டது என்றும், எதை வைத்து நாம் பொதுமக்களிடம் சென்று வாக்குக் கேட்க முடியும் என்றும் தொண்டர்கள் குரல் எழுப்புகின்றனர்.
அதே நேரம், வைகோவை கைவிட மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியதால், கண்கலங்கிய வைகோ, இப்போது உண்மையாகவே கண் கலங்கிக் கொண்டிருக்கிறார். தொடக்கம் முதலே தானாகவே சென்று காலில் விழுந்து உருகிக் கரைந்து போய்விட்டதால், இப்போது என்னதான் இழுத்துப் பிடித்தாலும் வைகோ.,வால் தான் நினைத்ததை அடைய முடியாது என்பது திமுக.,வினரிடம் இருக்கும் தெம்பும் தைரியமும்! அதனால் தாங்கள் சொன்னதைக் கேட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால், விடுதலைச் சிறுத்தைகள் எப்படி வழிக்கு வந்ததோ அப்படியே வைகோவும் வந்துவிடுவார், அப்படி வராவிட்டால் நல்லது, அந்த இரண்டு தொகுதியிலும் திமுக.,வினர் நின்றுகொள்வார்கள் என்று அக்கட்சியினர் திடமாகக் கூறுகின்றனர்.
திங்கள் கிழமை நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கான தொகுதிப் பங்கீடு நாளை மாலை அறிவிக்கப் படும் என்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டில் குழுவில் சந்தித்தபின் வைகோ பேசினார்.
அதற்கு, மதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் வர இயலாததால் இன்று முடிவாகவில்லை என்று காரணம் கூறினார் வைகோ. ஆனாலும், மக்களவைத் தேர்தல் 21 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது என்று உறுதியாகக் கூறியிருந்தார்.
எனவே அந்த உறுதியினடிப்படையில் திமுக.,வினர் கொடுக்கும் இரண்டு தொகுதிகளுடன் உதயசூரியன் சின்னத்தில் நின்று வைகோ திருப்திப் பட்டுக் கொள்வாரா? அல்லது திமுக.,வுடன் எவன் கூட்டு வைப்பான்? தமிழுணர்ச்சி செத்துப் போனவந்தான் கூட்டு வைப்பான்… இவர்களுக்கெல்லாம் தமிழுணர்ச்சி செத்துப் போய் விட்டதா? என்று மீண்டும் அதே வசனத்தைச் சொல்லிக் கொண்டு, தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுப்பாரா என்பது இந்தக் கூட்டத்துக்குப் பின் தெரிந்துவிடும்!