குமரி பகுதியின் சிவாலய ஓட்டம்! 12 ஆலயங்களில் சிவாலய சிறப்பு பூஜைகள்!

Published:

sivalaya ottam - 2026

சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி 12 சிவாலயங்களிலும் நடந்த சிவராத்திரி சிறப்பு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் ஓடிச் சென்று தரிசனம் செய்யும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிவாலய ஓட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் மங்காடு தாமிர பரணி ஆற்றில் புனித நீராடி திருமலை மகாதேவர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் காவி உடையணிந்து கைகளில் விசிறி ஏந்தியபடி சென்றனர்.

sivalaya ottam1 - 2026

நேற்று அதிகாலையில் இருந்து குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்தனர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அவர்கள் முன்சிறை மகாதேவர் கோவிலில் தரிசனம் செய்து அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கொடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த 11 கோவில்களிலும் பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக 12-வது சிவாலயமான திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் தரிசனம் செய்து சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்பட்டது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த 12 கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அந்தந்த ஊர்களில் உள்ள சிவ பக்தர்கள் சங்கத்தினர் குடிநீர், சுகாதார வசதி, அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு வழி நெடுகிலும் நீர்மோர், சர்பத், தர்பூசணி பழம் போன்றவை வழங்கப்பட்டன.

சிவாலய ஓட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு இந்த 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இன்று(செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இந்த கோவில்களில் சிவராத்திரியையொட்டி 4 கால யாம பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

sivalaya ottam2 - 2026

சிவாலய ஓட்டத்தையொட்டி மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் வாகனங்கள் காப்புக்காடு சந்திப்பில் இருந்து ஐரேனிபுரம், சடையன்குழி, கைசூண்டி, புதுக்கடை வழியாக திருப்பிவிடப்பட்டன.

இதேபோல் முன்சிறையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் வாகனங்கள் முட்டக்குளம், பண்டாரபரம்பு, மாராயபுரம், காப்புக்காடு வழியாக திருப்பிவிடப்பட்டன. இருப்பினும் அதிகாலையில் ஒரே நேரத்தில் பக்தர்கள் திரண்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Related articles

Recent articles

spot_img