தமிழகம் இப்போது கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்நோக்கியிருக்கிறது. பொய்த்துப் போன மழை, அண்டை மாநில நீர்த் தகராறு. வரண்டு கிடக்கும் ஏரிகள், குறைந்துவரும் நிலத்தடி நீர்மட்டம்… என அடுத்த சில மாதங்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் கடும் நீர்ப்பஞ்ச கலவரம் காத்திருக்கிறது.
இந்நிலையில், பண்டைய அரசர்கள் காலத்தில் மேற்கொண்டது போல், நீர்ப் பஞ்சத்தை தீர்க்க ஆலயங்களில் வருண ஜபம் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது அரசின் கட்டுப் பாட்டில் உள்ள அறநிலையத்துறை.
அதாவது, கோயில்களில் ஜபம் செய்ய சொல்லியிருக்கிறது தமிழக அரசு! மழை வேண்டி வருண ஜபம் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் நீர்நிலைகள் வறண்ட நிலையில், மழை வேண்டி அனைத்து ஆலயங்களிலும் வருணஜபம் நடத்த அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து மதுரை அழகர்கோவிலில் நாராயணவாவி தெப்பக்குளம் அருகே வருண ஜபத்துடன் விசேஷ பூஜை நடந்தது. பின்னர் மழை வேண்டி புனித தீர்த்தம் தெப்பக்குளத்தில் அம்பி சுந்தரநாராயணன் பட்டர் தலைமையில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. இந்த ஜபத்துக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
மதுரையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் சரவணப்பொய்கை ஆறுமுக சுவாமி சந்நிதியில் கலசங்களில் புனிதநீர் நிரப்பி சிவாச்சாரியார்கள், பாடசாலை மாணவர்கள் விக்னேஷ்வர பூஜை, மூல மந்திரங்களைக் கூறி பூஜை செய்தனர். கோயில் ஓதுவார் தேவாரம் பாடல்கள் பாடினார். புனிதநீர் சரவணபொய்கையில் தெளிக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.
இது போல் தமிழகத்தில் பல்வேறு கோயில்களிலும் வருண ஜபம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். அண்மையில், காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் இது போல் இடுப்பளவு நீரில் நின்று வருண ஜபம் செய்ததும், தொடர்ந்து காஞ்சியில் மழை பொழிந்ததும் செய்திகளாயின.
இருப்பினும், தெய்வ குற்றங்கள் காரணமாக மழைப் பொழிவு இல்லாமல் போகிறது என்றும், நல்லவர்கள் சாபத்தால் ஊரில் மழை இல்லாமல் வறட்சி நிலவும் என்பதும் வழிவழி நம்பிக்கை.
அண்மைக் காலமாக, திராவிட கழகம், திமுக., உள்ளிட்ட நாத்திக அமைப்புகள், தமிழக மக்களின் தெய்வ நம்பிக்கையை கேலி செய்தும், நிந்தனை செய்தும் பேசி வருகின்றன. குறிப்பாக, திமுக., தலைவர் ஸ்டாலின், அதன் தாய்க் கழகமான திக.,வின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இந்து மதக் கடவுள்கள் குறித்தும் நம்பிக்கைகள் குறித்தும் அவதூறு பேசி வருகின்றனர். கி.வீரமணி பேசிய அவதூறுப் பேச்சுகள் குறித்து போலீஸில் புகார் அளித்தும், விசாரணை கூட நடத்தப் படவில்லை.
தமிழக அரசு தெய்வ நிந்தனை செய்வோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் தான் மீண்டும் வானம் பொய்த்துப் போகிறது என்றும் மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது என்றும், ஊருக்கு மழை பெய்ய ஜபமும், ஊரில் உள்ளோர் அனைவரும் நலமாக வாழ வேண்டும்; ஊர் செழிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து வேதங்கள் சொல்லி வேண்டிக் கொள்ளும் அந்தணர்களை கிராமங்களை விட்டு விரட்டி விடுவதாலும், அந்தணர்கள் இல்லாத கிராமங்கள் என ஆக்கி வருவதாலும் கிராமங்கள் சீர்கெட்டு வருவதாகவும் குறை கூறுகின்றனர் பொது மக்கள்.
இந்நிலையில், கி.வீரமணியைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு, பிறகு ஜபங்கள் செய்ய தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.