800 மத போதகர்களை நாடு கடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 800 பேர், சட்ட விரோதமாக மதரஸாக்களில் பணிபுரிந்து வந்தது அம்பலமாகியுள்ளது. அவர்களிடம் நடத்தப் பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துவிட்டு, மத போதனையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
மற்றொரு அம்சமாக, இலங்கையில் ஜாகீர் நாயக்கின் பீஸ் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப் பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்துவர்களைக் குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதி ஜஹ்ரான் தொடர்பு கொண்டிருந்ததாக ஜாகீர் நாயக் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரீபால சிறீசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த மே தினக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர், இடைக்கால அறிக்கையிலுள்ள விவரங்கள் தொடர்பாக சட்டத் துறையினருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் கொடூரத் தாக்குதலை தடுக்க காவல்துறை தலைவருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் சந்தர்ப்பம் இருந்தபோதும் அவர்கள் அதனைச் செய்யவில்லை எனவும் அதிபர் சிறீசேன சுட்டிக் காட்டினார். விடுதலைப் புலிகளுடன் போராடியதை போல, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை என்று கூறினார் சிறீசேன.