மே 23 ஆம் தேதி பிறந்த தங்கள் குழந்தைக்கு நரேந்திர மோதி என பெயரிட்டுள்ளனர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதி!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு மே 23ஆம் தேதி அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் உ.பி., மாநிலம் கோண்டா அருகே உள்ள வாசிர்கன்ஜ் பகுதியைச் சேர்ந்த மெய்னஜ் பேகத்துக்கு குழந்தை பிறந்தது. வெளிநாட்டில் வசிக்கும் இவர் கணவர் முஷ்டாக் அஹ்மத், அன்று தனது குழந்தை குறித்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு, என்ன பெயர் வைக்கலாம் என்று தன் மனைவியிடம் கேட்டுள்ளார்.
அதே நேரம், இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியாகி வந்தன. அப்போது பாஜக., பெரும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், மெய்னஜ் பேஹத்தின் கணவர் தேர்தல் நிலவரம் குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், மீண்டும் பாஜக., ஆட்சிக்கு வருகிறது. மோதிஜி பிரதமராக மீண்டும் வருகிறார் என்று கூறினார்.
இந்நிலையில், தங்கள் குழந்தை பெயர் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இன்றைய தினத்தில் பிறந்த நம் குழந்தைக்கு மோதி பெயரைச் சூட்டக் கூடாது? என்று தோன்றியது. அதுகுறித்து விவாதித்துள்ளனர்.
இதை அடுத்து, அந்த இஸ்லாமிய தம்பதி தங்கள் குழந்தைக்கு நரேந்திர மோதி என பெயர் சூட்ட முடிவு செய்தது.
மெய்னஜ் பேஹத்தின் கணவர் முஷ்டாக்கின் தந்தை இதற்கு ஒப்புதல் அளிக்க, பேஹத்தின் சொந்த ஊரான பர்ஸாபுர் மஹ்ரூரில் உள்ள அவரது பெற்றோரின் அறிவுரைப் படி உடனே பெயரும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து குழந்தையின் பெயர் நரேந்திர தாமோதர்தாஸ் மோதி என பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மெய்னஜ் பேகம் குறிப்பிடுகையில், மோதிஜியைப் போல் என் மகனும் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் மோதிஜி பெயர் சூட்டினோம் என்றார்