‘இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதத்தில் அறிவிப்பு, வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறியுள்ளார்
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பை தொடங்கி வைத்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது…
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கல்விக்காக தனி சேனல் ஒன்று தொடங்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
புள்ளி விவரங்கள் கிடைத்த பின்னர் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து அறிவிக்கப்படும்.
‘வெயிட்டேஜ்’ முறையால் பணி வாய்ப்பை இழந்தோர் மற்றும் 2013 – 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பணி வழங்கும் நிலையில் அரசு இல்லை.
மாணவர் சேர்க்கை அதிகரித்தால்தான் பணி வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு இரண்டு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப் பட்டுள்ளனர். அதுபோல் ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கையைப் பொறுத்து மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.