உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தான் சந்தித்த இரண்டாவது போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் சுற்றுப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா நிதானமாக ஆடி, 57 ரன்னில் ஆட்டமிழந்தார். 109 பந்துகளை சந்தித்த தவான், 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
விராட் கோலி 82 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டி, 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். தோனி 14 பந்துகளில் 27 ரன்னும், ராகுல் 11 ரன்னும் எடுத்தனர். இதனால், 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன் எடுத்தது.
353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியினர், இந்திய வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். 13 ஓவர் வரை விக்கெட் இழப்பின்றி 60 ரன் சேர்த்த ஆஸ்திரேலிய அணி, பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.
ஆரோன் பிஞ்ச் 36 ரன், வார்னர் 56 ரன், ஸ்டீவன் சுமித் 69 ரன். கவாஜா 42 ரன் விளாசி என நல்ல ரன்களை எடுத்தனர். பின்னர் ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 28 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் தடுமாறியது ஆஸ்திரேலிய அணி.
அலெக்ஸ் கேரி மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 55 ரன் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 316 ரன் எடுத்த அந்த அணி, 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகனாக, 117 ரன் குவித்த ஷிகர் தவான் அறிவிக்கப் பட்டார். இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றி நடை தடுக்கப் பட்டது. இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.