வட கிழக்கு மாநிலமான அசாமில், தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம், அபாய அளவை தாண்டி ஓடுகிறது. சாலைகள், வெள்ளத்தால் சேதமடைந்தன.
தேசிய பூங்காவான காஸிரங்கா வெள்ளத்தில் மிதக்கிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமிலும், வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், டில்லி, பஞ்சாப், பீஹார் மாநிலங்களிலும், பருவமழை தீவிரமடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா நதியில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும், வெள்ளம் புகுந்துள்ளது.அசாமில் திப்ரூகர் வழியாக ஓடும் புர்கிதேகிங், லட்சுமிபூர் வழியாக ஓடும் சுபான்ஸ்ரீ, கோலகாட் வழியாக ஓடும் தான்ஸ்ரீ, சோனித்பூர் வழியாக ஓடும் ஜியாபெராலி, உள்ளிட்ட 9 கிளை ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டிப் பாய்கின்றன.
சில மாவட்டங்களில் பெய்த கன மழையால் 4 லட்சத்திற்கும் மேலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான சாலைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன; வீடுகள் இடிந்து விட்டன. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
கனமழைக்கு 15 பேர் பலியாகியுள்ளனர். கனமழையால் கஸிரங்கா தேசிய வன விலங்கு பூங்கா 95 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இங்குள்ள விலங்குகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் நடவடிக்கை அரசு மேற்கொண்டுள்ளது.