“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”
(“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும்
பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது,
ஸ்ரீருத்ரம்!”)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான – தேங்காய்,பழம்,கற்கண்டு
மலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.
ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டு
வந்து பெரியவாள் முன்பாக வைத்துவிட்டு வணங்கினான்.
அவன் கொண்டுவந்திருந்த மண்சட்டி,பானை,
அகல் விளக்கு போன்றவைகளை ஒவ்வொன்றாகக்
கையில் எடுத்து, தடவிப் பார்த்து குழந்தைபோல்
மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அருகிலிருந்த தொண்டரைப் பார்த்து,
“உனக்கு ஸ்ரீருத்ரம் தெரியுமோ?” என்று கேட்டார்கள்.
“தெரியும்”
“நாலாவது அனுவாகம் சொல்லு..”
தொண்டர், ” நம ஆவ்யாதினீப்யோ…” என்று
தொடங்கி சொல்லிக்கொண்டேபோனார்.இடையில்
“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”
என்ற வாக்கியம் வந்ததும், பெரியவாள் ஜாடை
காட்டி நிறுத்தச் சொன்னார்கள்.
“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும்
பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது,
ஸ்ரீருத்ரம்!” என்று உணர்ச்சியோடு மொழிந்தார்கள்
பெரியவாள்.
மண்பாண்டங்கள் கொண்டுவந்த குயவனுக்கு
வேஷ்டி – புடவை கொடுக்கச் சொன்னார்கள்.
“மவனுக்கு படிப்பு வரலீங்க,சாமி”
என்று முறையிட்டான் குயவன்.
“உனக்கு படிக்க தெரியுமா?”
“தெரியாதுங்க…”
“பையன் படித்தால் நல்லது.டியூஷன் வைத்தாவது
சொல்லிக் கொடு. படிக்காவிட்டாலும் பரவாயில்லை.உன் தொழிலைக் கற்றுக்கொடு. உன்னைக் (படிப்பறிவில் வராமல், ஒரு தொழில் மட்டும் தெரிந்த உன்னை) காப்பாற்றும் கடவுள் அவனையும் காப்பாற்றுவார்…”
குயவன் பிரசாதம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாகப் போனான்.
பெரியவாளின் சொற்களுக்கு அழிவு கிடையாது.
கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!