காப்பான் பெருசா கள்ளன் பெருசானு ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டத்தில் சில தில்லாலங்கடி வேலைகள் நடந்தன. கேரளாவைச் சேர்ந்த சிலர், தேனி மாவட்டத்தில் வரண்ட பகுதியில் முதலில் விவசாய நிலம் வாங்குவார்கள்.
ஒரு பேச்சுக்கு அந்த நிலம் ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கினார்கள் என்றால், அதை 3-5 லட்சத்திற்கு வாங்கினதாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். ( உள்ளே லஞ்சம் கொடுத்து தான்)
அதை அப்படியே எடுத்துட்டுப் போய் வங்கியில் நில அடமானம் பெயரில் விவசாயக் கடன் வாங்குவார்கள். 5 லட்சம் மதிப்பு காட்டி 4 லட்சம் கடனாக வாங்குவார்கள். (அங்கேயும் லஞ்சம் தான்). ஒரு லட்சத்திற்கு வாங்கிய நிலம் ஓரிரு மாதங்களில் நான்கு லட்சங்கள் கைக்கு வந்திடும்.
அப்புறம் என்ன? டேஷே ஆச்சுனு நிலத்தை விட்டு விட்டு ஊருப் பக்கம் போயிடுவானுக. ஒருத்தன் ஒரு பத்து ஏக்கரை பத்து லட்சத்திற்கு இப்படி வாங்கினால், சில மாதங்களில் சுளையாக 30 லட்சங்கள் லாபம். ஐந்து லட்சங்கள் லஞ்சம் மற்றும் செலவுகள் செய்தாலும் கால் கோடி ரூபாய் லாபம்.
ஐந்து வருடங்கள் கழித்து வங்கி நிர்வாகம் நோட்டீஸ் மேலே நோட்டீஸ் அனுப்பிப் பார்த்து பதில் இல்லை என்றவுடன், நிலத்தை ஏலத்திற்கு விடும். அன்றைய மதிப்பு பெரும்பாலும் 3 லட்சமாக இருக்கலாம். வங்கிக்கு நட்டம் ஒரு லட்சம் மற்றும் ஐந்து வருட வட்டிகள் நட்டம்.
ஆனால், கடன் நிலுவை என்பதிலிருந்து வெளியே வந்திடும். கணக்கும் முடிந்து விடும். ஒரு தனி நபரால் இத்தனை நட்டம் என்றால், ஒரு மாவட்டம் முழுவதும் எவ்வளவு நட்டம் என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படி தேசம் முழுவதும் எவ்வளவு நட்டம் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.
விவசாயக் கடன் என்ற பெயரில், இது போன்ற பல திருட்டுத் தனங்கள் நடப்பதால் தான், உண்மையான விவசாயிகளுக்குத் தேவையான முறையான கடன் கிடைப்பதில்லை.
நாமும் ஏய் அரசே விவசாயி வயித்தில் அடிக்காதேனு ஃபேஸ்புக்கில் கம்பு சுத்துவோம். கூடுதலாக, வங்கியின் வாராக்கடனுக்கு பெரு நிறுவனங்கள் மட்டுமே என்று நம் மனசில் ஆழமாகப் பதிய வைத்து விடுவார்கள்.
கார்பொரேட் ஒழிக என்று கூச்சல் போடும் அரசியல்வாதிகளின் பினாமிகள் தான் இப்படியான தில்லுமுல்லுகளை அதிகம் செய்கிறார்கள்.
- ஆனந்தன் அமிர்தன்