மிரட்டும் போக்கை கைவிட்டு மென்மையாக அணுக வருமானவரித்துறை முடிவு செய்துள்ளதாம். வருமான வரி செலுத்துவோரிடம் நட்புடன் அணுக வேண்டும் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது.
நோட்டீஸ் அனுப்பியும் வழக்குத் தொடர்ந்தும் வரியை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த வருமான வரி அதிகாரிகள் இனிமேல் குறிப்பிட்ட செலவுக் கணக்கில் சேர்க்கப்பட்டதா, வரி செலுத்தப்பட்டதா என இதமான கேள்விகளை மட்டும் கேட்பார்களாம்!
மிகப் பெரிய அளவில் பணப் பரிமாற்றம், முதலீடு, உள்ளிட்டவை குறித்து வருமான வரி கணக்கில் தாக்கல் செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் சேமிப்பு செயலிகள் மூலமாக முன்கூட்டியே அவகாசம் அளித்து, குறுஞ்செய்திகள் மூலமாக நினைவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அகமதாபாதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மறைமுக வரித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே ஆகியோர் இப்பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். வாடிக்கையாளரின் முகமறியாத வகையில் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை கையாள்வது குறித்தும் நட்புடன் அணுகுவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.